யாழில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.
[2026-05-20 22:20:01] Views:[122]
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய மாவட்ட செயலர்,
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டு மே மாதம் வரை டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த இரு வருடங்களிலும் யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் இறப்புகள் காணப்படவில்லை. அதற்கு முந்திய வருடங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
இந்நிலையில் இனிவரும் காலங்களில் நோய் தாக்கம் அதிகரித்து காணப்படாதவகையில் அதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பொது மக்களுக்கான போதிய விழிப்புணர்வின் அவசியத்தினையும் எடுத்துக்கூறி அனைவரும் ஒருங்கிணைந்த வகையில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து டெங்கு விழிப்புணர்வு வாரத்தினை எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடாத்துவது எனவும், அந்தவகையில் 25 ஆம் திகதி பொதுமக்கள் சிரமதானத்தினை மேற்கொள்ளுதல், 26 ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களிலும், பாடசாலைகளிலும், 27 ஆம் திகதி தனியார், வர்த்தக நிலையங்களிலும் கள ஆய்வுகள் மற்றும் சிரமதானங்களை மேற்கொள்வது என கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.










