யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்த நபர்
[2026-03-12 21:56:38] Views:[18]
யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன், மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
வடமராட்சியில் நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கரவெட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக நேற்றைய தினம் மாலை கரவெட்டியில் உள்ள தனது வீட்டில், தனது இரண்டு பிள்ளைகளையும் ஒரு அறையில் பூட்டி வைத்து, மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு, மனைவியை கத்தியால் குத்த முனைந்த வேளை, மனைவி, கணவனை கீழே தள்ளி விழுத்தி விட்டு, அறையில் இருந்த இரண்டு பிள்ளைகளையும் மீட்டுக்கொண்டு, வீட்டில் இருந்து தப்பியோடி அருகில் இருந்த கடையொன்றினுள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அந்நிலையில், மனைவி, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மந்திகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கே சென்று இருப்பார் என்ற எண்ணத்தில், மனைவியின் தாய் வீட்டிற்கு சென்றவர், அங்கே தனிமையில் இருந்த மனைவியின் தாயாரை வாளினால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து வெளியே வந்து அப்பகுதிகளில் தேடுதல்களை நடத்தியுள்ளார். அதன் போது, வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பழச்சாறு கடையொன்றில் மனைவியின் தந்தை நிற்பதனை அவதானித்து, அங்கு சென்று அவர் மீது மூர்க்கத்தனமாக வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளார். அதனை அடுத்து, அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










