பெரும் தொகை போதைப்பொருட்களுடன் சிக்கிய 11 நபர்கள் கைது!
[2026-01-24 20:28:40] Views:[11]
தெற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சுமார் 270 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொலிஸ் மாஅதிபருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் நடத்திய இந்தச் சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், முதற்கட்டமாக ஒரு நெடுநாள் மீன்பிடிப் படகு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதிலிருந்து சுமார் 200 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அதே கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நெடுநாள் மீன்பிடிப் படகும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அந்தப் படகிலிருந்து மேலும் ஆறு சந்தேகநபர்கள், இரண்டு செய்மதித் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதுடன், அதில் சுமார் 70 கிலோ கிராம் போதைப்பொருள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










