யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த நெதர்லாந்து தூதுவர்.
[2026-01-22 22:03:26] Views:[16]
நேற்றைய தினம் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் H. E. Wiebe De Boer, யாழ்ப்பாண மாவட்ட மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பில் மீள்குடியேற்ற நிலைமைகள், இந்தியாவிலிருந்து மீளக்குடியமர்ந்த குடும்பங்கள் மற்றும் மீளக்குடியமரவுள்ள குடும்பங்கள் தொடர்பாகவும், அக் குடும்பங்களின் வாழ்வாதார நிலைப்பாடுகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார்.
யாழ்ப்பாண கோட்டை தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களிடம் வினவிய போது, தற்போது யாழ்ப்பாண கோட்டை சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளதாகவும், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாவிகள் அதிகம் வருகைதரும் இடமாகவும், தொல்லியல் திணைக்களம் மற்றும் சுற்றுலா அமைச்சுடன் இணைந்த வகையில் யாழ்ப்பாண கோட்டை அபிவிருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் உள்பகுதியில் சுற்றுலாவிகளை கவரக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடுகளை உயர்ஸ்தானிகருக்கு அரசாங்க அதிபர் விபரித்தார்.










