யாழ் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 3 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
[2025-12-28 19:44:19] Views:[12]
நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று (27) இரவு நெடுந்தீவு கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 மீனவர்களையும் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் கடற்தொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் பாரப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், இன்று (28) முற்பகல் 11.00 மணியளவில் அவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சம்பவத்தை ஆராய்ந்த நீதவான் குறித்த 3 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 2026.01.07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.










