யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் பிரதான நத்தார் திருப்பலி:
[2025-12-25 18:16:35] Views:[22]
யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி, யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் மிகவும் பக்திப்பூர்வமாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட ஆராதனையில் பெருந்திரளான கத்தோலிக்க மக்கள் கலந்துகொண்டனர்.
நாட்டில் நிலவிய அனர்த்தங்கள் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரில் பங்கெடுக்கும் வகையில், இம்முறை ஆடம்பரக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து “எளிமையான நத்தார்” கொண்டாடுமாறு திருச்சபைகள் விடுத்த வேண்டுகோளை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். இதனால் வழமையான வாணவேடிக்கைகள், மின் அலங்காரங்கள் இன்றி மிக எளிமையான முறையில் வழிபாடுகள் நடைபெற்றன.
புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற இந்த நள்ளிரவு வழிபாட்டில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டதோடு, நத்தார் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.
ஆராதனையின் போது, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டன. கொண்டாட்டங்களுக்காக செலவிடும் தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளாக வழங்குமாறும் இதன்போது கேட்டுக்கொள்ளப்பட்டது.
யாழ். குடாநாட்டின் ஏனைய கத்தோலிக்க தேவாலயங்களிலும் நள்ளிரவு மற்றும் காலை நேர ஆராதனைகள் மிக எளிமையான முறையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










