பாகிஸ்தானில் ஐந்து பொலிஸார் சுட்டுக்கொலை!
[2025-12-25 10:26:54] Views:[11]
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள கராக் மாவட்டத்தில், இனந்தெரியாத ஆயுதக் குழு ஒன்று கடந்த (23) நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொலிஸார் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கராக் மாவட்டத்தில் உள்ள தனியார் எரிசக்தி நிறுவனம் ஒன்றின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத ஆயுததாரிகள், பொலிஸாரின் வாகனத்தை வழிமறித்து சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொலிஸாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையடுத்து, தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்த வாகனத்திற்குத் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தை எந்தவித அமைப்போ அல்லது இயக்கமோ இதுவரை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறியுமாறு அவர் பாதுகாப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.










