இலங்கையின் பல மாகாணங்களில் காற்றின் தரம் கடும் வீழ்ச்சி! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
[2025-12-23 19:43:18] Views:[12]
இலங்கையின் வளிமண்டலத்தில் காற்றின் தரம் தற்போது கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது காற்றின் தரக் குறியீடு 150 முதல் 200 வரை பதிவாகியுள்ளதாகவும், கடந்த 24 மணித்தியாலங்களாக இந்த வீழ்ச்சி அவதானிக்கப்பட்டு வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச எல்லைகளுக்கு இடையிலான காற்று சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவபெயர்ச்சி காலநிலை தீவிரமடைந்துள்ளமை போன்ற இயற்கைக் காரணங்கள் மற்றும் வாகனப் புகை, காடுகளுக்குத் தீ வைப்பு மற்றும் பிளாஸ்டிக்/பொலித்தீன் பொருட்களை எரித்தல் போன்ற மனித செயற்பாடுகள் காரணமாக இவ்வாறு காற்றின் தரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணம் போன்ற மாகாணங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பாதிப்புள்ளவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், சுவாசிப்பதில் சிரமம் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற பொருட்களை எரிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.










