பருத்தித்துறை நகரசபையின் அதிரடி நடவடிக்கை! பொலித்தீன் பாவனை முற்றாக தடை!!
[2025-12-23 19:20:50] Views:[11]
உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் எதிர்வரும் 01.01.2026 திகதி முதல் பொலித்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்படும் எனவும், அதனை மீறும் உணவகங்கள் உள்ளிட்ட வியாபார நிலையங்களின் வியாபார உரிமம் இடைநிறுத்தப்படும் என பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது.
உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்களை கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுடன் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பருத்தித்துறை நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் இதனை தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் பருத்தித்துறை நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நேற்று (22) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ், நகரசபை நிர்வாக உத்தியோகத்தர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது நகரசபை பொதுச்சுகாதார பரிசோகரினால் லஞ்ச் சீற் பாவனை தடை குறித்தும் உணவகங்கள், உணவு கையாளும் நிலையங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பிலும் விளக்கி கூறப்பட்டிருந்தது.
கடந்த ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் பருத்தித்துறை நகரசபைக்குட்ட உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் உள்ளக பயன்பாட்டில் லஞ்ச் சீற் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதுடன் 01.01.2026 திகதி முதல் முற்றுமுழுதான லஞ்ச் சீற் பாவனையை தடைசெய்யும் வகையில் மூன்று மாத கால அவகாசம் பருத்தித்துறை நகர சபையினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










