மோசமாகும் காலநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!
[2025-11-26 18:54:51] Views:[14]
அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக இலங்கையின் தென் திசையில் தாழ் அமுக்கப் பிரதேசம் நிலைகொண்டிருந்தது. இது அடுத்துவரும் 30 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக விருத்தியடையும்.
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 150 மில்லமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்வதுடன் நாட்டின் ஏனைய பிரராந்தியங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து வட திசையை நோக்கி காற்று வீசும். காற்றின் வேகம் சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றராக அதிகரித்தும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் இருந்து மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.










