பெண்களின் பாதுகாப்புக்காக மூன்று அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
[2025-11-24 21:20:07] Views:[16]
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் கொண்ட வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
மேலும், பெண்களை இழிவுபடுத்தல், அவதூறுகளை எழுப்புதல், அவமானம்மிக்க பேச்சுகளுக்கு வழிவகுத்தல் போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு அவற்றிலிருந்து பெண்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, இந்த செயற்திட்டத்தின் முதற்கட்டமாக, சமூகத்தில் பாலியல் வன்முறைகளுக்கு முகம் கொடுக்கும் பெண்கள் முறைபாடளிக்க மூன்று அவசர சேவை தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, சமூகத்தில் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்கள், காவல்துறையின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் 109 என்ற இலக்கம், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான தேசிய உதவி சேவையின் 1938 என்ற இலக்கம், இலங்கை கணினி அவசர ஆயத்த அணியின் 101 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புக்கொண்டு தெரியப்படுத்த முடியும் .










