இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தலில்ல் ஈடுபட்ட படகுடன் மூவர் கைது!!
[2025-11-21 13:12:16] Views:[11]
இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த படகுடன் மூவரை யாழ்ப்பாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் நேற்று (20) அதிகாலை யாழ்ப்பாணம், குருநகர் கடற்கரையில் வைத்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து குறித்த படகு 350 கிலோகிராம் கஞ்சாவுடன் வருவதாக குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த படகிலுள்ள கஞ்சாவை கரையில் வைத்து கைப்பற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
அதற்கமைய நேற்று அதிகாலை கரைக்கு வந்த படகை கைப்பற்றிய போது அதில் கஞ்சா இருக்கவில்லை எனவும், கொண்டுவரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இடைநடுவில் கைமாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த படகு இந்திய கடலில் பயணித்தமை ஜீ.பீ.எஸ் ஊடாக அவதானிக்கப்பட்ட இந்நிலையில், படகில் பயணித்த இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
மேலும், கைதானவர்களை அழைத்து செல்ல கடற்கரையில் மோட்டார் சைக்கிளில் காத்திருந்த இளைஞர் ஒருவரையும் 130 மில்லி கிராம் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட படகு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றுடன், கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட படகின் உரிமையாளர் ஏற்கனவே 300 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், இப்போது அவரின் மருமகன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










