மன்னார் கடலில் இரு படகுகள் மோதி விபத்து! ஒருவர் படுகாயம்!!
[2025-11-16 12:59:07] Views:[14]
மன்னார் - தாழ்வுபாடு கடலில் இரு மீன்பிடி படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு படகுகளும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியதுடன், மீனவர் ஒருவர் காயமடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் தாழ்வுபாடு மீன்பிடித் துறையில் இருந்து நேற்று (15) இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் படகுடன், கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிய மற்றுமொரு மீனவரின் படகு மோதியதில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த விபத்து தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான ஒரு படகு கரை திரும்பிய நிலையில், மற்றைய படகு கடலில் மூழ்கியுள்ளது, பின்னர் அந்தப் படகு மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், கடலில் மூழ்கிய படகில் பயணித்த மீனவர் ஒருவர் சிகிச்சைகளுக்காக இன்று (16) காலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான இரண்டு படகுகளின் உரிமையாளர்களும் குறித்த விபத்து தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










