தலைமன்னார் - ராமேஸ்வரம் இடையில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கப்பல் சேவை.
[2025-10-28 12:17:57] Views:[19]
இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே புதிய கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கலந்துரையாடியுள்ளன.
மும்பையில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் போது, இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால், இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவுடன் ஆகியோருக்கு இடையில் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த புதிய கப்பல் பாதையை திறப்பதன் மூலம் இந்தியா - இலங்கை கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.










