யாழில் விசேட நடமாடும் சேவை - மக்களுக்கு பயனுறுதியான பல சேவைகள்:
[2025-08-05 12:31:37] Views:[14]
ஜனாதிபதி செயலகத்தின் "க்ளீன் ஸ்ரீலங்கா" செயற்றிட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் "இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு - ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்" எனும் கருப்பொருளிலான விசேட நடமாடும் சேவை யாழ் மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை, கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் 14 ஆம் திகதி பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும்,
உடுவில், தெல்லிப்பளை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் 15 ஆம் திகதி உடுவில் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட நடமாடும் சேவையில் பின்வரும் முக்கிய சேவைகள் வழங்கப்படவுள்ளன:
ஆட்பதிவுச் சேவை
பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள்
ஓய்வூதியச் சேவைகள்
வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சேவைகள்
மோட்டார் வாகனப் பதிவுகள்
கம்பனிப் பதிவுகள்
சுகாதார சேவைகள்
ஏற்றுமதிக்கான வாய்ப்புகள்
வடக்கு மாகாணத்தின் சகல அமைச்சுகளுக்குரிய சேவைகள்
பிரதேச செயலகம் மற்றும் உள்ளூராட்சி மன்ற சேவைகள்
குறித்த நடமாடும் இச்சேவை தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று நேற்று (04) யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அவரது தலைமையில் நடைபெற்றது.
இதில் அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்;
நடைபெறவுள்ள நடமாடும் சேவைக்கான ஏற்பாடுகளை முன்னறிவித்து பார்வையிட 2025.08.02 திகதி அன்று இரண்டு இடங்களிலும் கள ஆய்வுகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
2025.08.13 திகதி அன்று கொழும்பிலிருந்து அதிகாரிகள் யாழ்ப்பாணம் வருகைதர உள்ளதாகவும், இந்த நடமாடும் சேவையை ஜனாதிபதி செயலகம், வடக்கு மாகாண சபை, மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து ஒருங்கிணைக்கும் வகையில் முன்னெடுக்கவுள்ளன.
இக் கலந்துரையாடலில் பொதுமக்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள், மண்டப ஒழுங்குகள், குடிநீர் வசதிகள், சேவைகளில் ஈடுபடும் ஆளனிகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு, பதவிநிலை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
மேலும், மக்கள் பயன்பெறும் வகையில், நடமாடும் சேவையை செயல்திறனுடன் முன்னெடுக்க அனைத்து சார்ந்த தரப்புகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்கள் கே. சிவகரன், பா. ஜெயகரன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளர் க. திருக்குமார், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் எஸ். ரமேஷ்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தாஷினி, நிர்வாக உத்தியோகத்தர் ஆ. சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.










