இலங்கையில் கைதான 155 வெளிநாட்டவர்கள்: அனைவரையும் உடனடியாக நாடு கடத்த நடவடிக்கை..!
[2025-07-30 19:23:56] Views:[11]
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று கொழும்பிலுள்ள ஒரு அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்திய பொது விசா காலாவதியான 155 இந்திய பிரஜைகளை கைது செய்துள்ளது.
இது இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய சட்டவிரோத குடிநுழைவுச் சம்பவமாக கருதப்படுகிறது.
கொழும்பிலுள்ள ஒரு கட்டிடத்தில் சர்வதேச இணையவழி விளம்பர மற்றும் சூதாட்டச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய நிறுவனமொன்றை சுற்றிவளைத்த போது குறித்த சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் அனைவரும் 25–45 வயதுக்குள் உள்ள ஆண்கள். இவர்கள் ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை வீசா காலத்தை மீறி வேலை செய்துள்ளனர்.
இந்த நிலையில், வெலிசர தடுப்பு மையத்தில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் உள்ளதால், இந்த 155 பேரையும் அங்கு தற்காலிகமாக வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் அனைவருக்கும் உடனடி நாடு கடத்தல் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வழங்கிய விசா கட்டணங்கள் மற்றும் அபராதங்களாக ரூ.33.6 மில்லியன் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரே நாளில் அதிகபட்ச வருமானம் கிடைத்துள்ளதாகவும், இது வரலாறு காணாத அளவிலான சட்ட நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










