நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு கப்பல் சேவை - பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்
[2025-07-17 09:40:41] Views:[14]
நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் காங்கேசன்துறை இடையே கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தினை சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்ததாக அந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையே கப்பல் வழியாக போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு இருவழி கட்டணமாக 28 ஆயிரத்து முந்நூறு ரூபா அறவிடப்படுகின்றது. காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் செல்வதற்கு ஒருவழி கட்டணமாக 12 ஆயிரத்து முந்நூறு ரூபாவும் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வருவதற்கு ஒருவழி கட்டணமாக 16 ஆயிரம் ரூபாவும் அறவிடப்படுகிறது.
நல்லூர் பெருந்திருவிழாவினை முன்னிட்டு எமது பயணிகளுக்காக விசேட சலுகைகளை வழங்கவுள்ளோம். அந்த சலுகைகள் தொடர்பாக விரைவில் அறிவிப்போம். எமது கப்பல் சேவையானது வழமை போல செவ்வாய் கிழமை தவிர்ந்த ஆறு நாட்களும் சிறப்பான சேவையில் ஈடுபட்டு வருகின்றது. கப்பல் சேவையில் ஏதாவது மாற்றங்கள் நிகழுமிடத்து அவை குறித்து நாங்கள் முற்கூட்டிய அறிவிப்பு வழங்குவோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.










