யாழில் யுவதி கடத்தல்.! பொலிஸார் தீவிர விசாரணையில்:
[2025-05-22 15:49:06] Views:[15]
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்று (21) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர்.
பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர். இதன்போது அங்கு வந்த பெண் வீட்டார் குறித்த யுவதியை பிரிப்பதற்கு முயற்சி செய்தபோதும், இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தாலும், இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காதமையினாலும் அவர்களை பிரிக்க முடியாது என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் பெண் வீட்டாரின் கட்டாயத்தின் பேரில் வழக்கு மல்லாகம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பிய போது குறித்த இளம் தம்பதியினர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டு யுவதியை கடத்தி சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இளைஞன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.










