சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுடன் நெடுந்தீவு நடுக்கடலில் தத்தளித்த படகு!
[2025-01-01 17:15:23] Views:[11]
நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் பயணிகள் படகொன்று இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்த நிலையில், நெடுந்தீவு மீனவர்களின் சிறிய படகுகளில் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த படகில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தென்பகுதி மக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என சுமார் 60 பேருக்கும் அதிகமானோர் பயணித்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நெடுந்தீவில் இருந்து இன்று பகல் 11:30 மணிக்கு குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபட்ட கரிகணன் பயணிகள் படகானது நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு இயங்க மறுத்தமையால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குறித்த படகானது கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் கடலில் தத்தளிப்பதை அவதானித்த நெடுந்தீவு மீனவர்கள் தமது சிறிய மீன்பிடி படகுகளை கொண்டு சென்று பயணிகளை ஆபத்திலிருந்து விரைந்து மீட்டனர்.
பின்னர் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் படகின் உதவியுடன் குறித்த பயணிகள் படகானது மீட்க்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது.
அதேவேளை, குறித்த பகுதிக்கு நெடுந்தீவு பிரதேச செயலாளர் மற்றும் ஊழியர்களும் விரைந்து சென்று நிலைமைகளை அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.










