இன்று கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றத்தால் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு...!
[2024-12-24 21:45:53] Views:[9]
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத முறையிலான மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களையும் தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 17 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு முதல் கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் மதியம் 01:00 மணியளவில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 17 சந்தேக நபர்களையும் ஆஜர்படுத்திய நிலையில் சம்மந்தப்பட்ட 17 மீனவர்களையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதாவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மீனவர்கள் இன்று அதிகாலை 12:30 மணியளவில் தலைமன்னார் கடற்பரப்பில் சட்ட விரோத இலுவை மடிவலைகளை பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இரண்டு ரோலர் படகுகள் உட்பட அதில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்களையும் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










