பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து வசதி;
[2024-12-24 09:11:04] Views:[11]
பண்டிகை காலத்தை முன்னிட்டு பொது மக்களின் வசதிகருதி விசேட பேருந்து மற்றும் ரயில் சேவளை இயக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதன்படி இன்று முதல் விசேட பஸ் சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பண்டிகைக் காலம் முடியும் வரை தினமும் 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு அனைத்து டிப்போ மேலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கிராமங்களுக்குத் திரும்பிய மக்கள் கொழும்புக்கு வருவதற்காக பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பண்டிகை காலத்தையொட்டி, விசேட புகையிரதமும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே தெரிவித்தார்.
இதன்படி, டிசம்பர் 28ஆம் திகதி காலை பதுளைக்கு விசேட புகையிரதமும், 29ஆம் திகதி இரவு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு விசேட புகையிரதமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு மேலதிகமாக யாழ். தேவி விரைவு ரயிலுடன் யாழ்ப்பாணம் வரை நகரங்களுக்கு இடையேயான விரைவு ரயிலையும் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.










