இந்தியாவில் கைதான இலங்கை கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு...!!
[2024-12-22 10:26:47] Views:[9]
கடந்த 07 மாதங்களுக்கு முன்னர் அனலைதீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
அண்மையில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றதற்கு பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான உரையாடலிலும் புதிய கடற்றொழில் அமைச்சரின் முயற்சியினாலும் குறித்த மூன்று கடற்றொழிலாளர்களும் விடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஒருவர் மட்டக்களப்பு வந்தாறுமூலையைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.
கடந்த 07 மாதங்களுக்கு முன்னர் இவர்கள் அனலைதீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்றவேளை இயந்திர பழுதின் காரணமாக இந்தியாவின் கரையோரத்தை சென்றடைந்துள்ளனர்.
இதன் பின்னர் இவர்களை சிறைப்பிடித்த இந்திய கடற்படையினர் சிறிது காலம் சென்னை புழல் சிறையிலும் அதற்கு பின்பு திருச்சி இடைத்தங்கல் முகாமிலும் தங்க வைத்திருந்தநிலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.










