வளிமண்டலவியல் அறிவிப்பு - மீன்பிடி படகுகள் மற்றும் கடல்சார் சமூகம் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்
[2024-12-07 19:58:13] Views:[11]
கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடல்சார் சமூகம் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று (07) காலை 08.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ளதாகவும். இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது டிசம்பர் 11 ஆம் திகதி இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடலை அடைய அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்படி கடற்பரப்புகளில் தற்காலிகமாக மிக பலத்த காற்றுடன் (மணிக்கு 60 கி.மீ.) பலத்த மழை பெய்யக்கூடும் என்பதுடன் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.










