மன்னார் கடலில் வெடிப்புச் சம்பவம்! மீனவர்கள் இருவர் படுகாயம்;
[2024-11-22 12:15:54] Views:[11]
மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு சம்பவத்தில் மீனவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (21) மதியம் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இருவர் கடலில் மிதந்து வந்ததாக கூறப்படும் பொதியை சோதனையிட்ட போது குறித்த பொதி வெடித்ததில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த மீனவர்கள் மன்னார், பனங்கட்டு கொட்டு பகுதியை சேர்ந்த எஸ்.ரமேஷ் மற்றும் ஏ. ஆரோக்கியநாதன் என தெரியவந்துள்ளது.
கடலில் மிதந்து வந்த பொதியை எடுத்து தாம் சோதனை செய்த போது குறித்த பொதி வெடித்துள்ளதாக காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் வாக்கு மூலம் வழங்கி உள்ளனர்.
எனினும், மன்னார் பிரதேசத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்ற கடற்றொழிலாளர்கள் சிலர் தடை செய்யப்பட்ட டைனமைட் வெடி பொருளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், குறித்த கடற்றொழிலாளர்கள் இருவரும் டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.










