தனக்கு தெரியாமல் வேட்பாளர் பட்டியலில் பெயர்.? யாழில் பெண்ணொருவர் முறைப்பாடு.:
[2024-11-13 12:16:46] Views:[15]
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொர்பில் யாழ்ப்பாண உதவி தேர்தல் ஆணையாளரிடம் நேற்றையதினம் குறித்த பெண் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சுயேட்சை குழுவொன்று என்னுடைய அனுமதி இன்றி வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை குறிப்பிட்டுள்ளது. இதுவரை காலமும் எனக்கு இந்த விடயம் தெரிய வரவில்லை.
கடந்த திங்கட்கிழமை எனது மாணவி ஒருவர் எனக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து, தேர்தலில் போட்டியிடுகிறீர்களா ? என வினாவிய போதே, எனது பெயர் வேட்பாளர் பட்டியலில் வந்திருந்தமை தெரிய வந்தது.
யாழ். மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகம் ஊடாக அது என்னுடைய பெயர் தான் என்பதனையும், எனது அனுமதியின்றி எனது பெயரை வேட்பாளர் பட்டியலில் சுயேட்சை குழு தலைவர் உள்ளடக்கி உள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.
அது தொடர்பில் யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் முறையிட்டுள்ளேன் என தெரிவித்தார்.










