ஊடக பணியாளர் மீது தாக்குதல்; சந்தேகநபர்கள் கைது !
[2024-10-15 12:29:26] Views:[21]
யாழப்பாணத்தில் ஊடக பணியாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகி இருந்த சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்றில் தொழிநுட்பவியலாளராக பணியாற்றும் விபூஷண் என்பவர் மீது கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நகர், கஸ்தூரியார் வீதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலுக்கு இலக்கான ஊடக பணியாளர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, பின்னால் பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அவரை வழி மறித்து, ஏன் தாங்கள் முந்தி செல்வதற்கு வழி விடவில்லை என கேட்டு, தலைக்கவசத்தால் மிக மோசமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர்.
இத்தாக்குதல் தொடர்பிலான வீடியோ காட்சிகள் கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகியிருந்தது. அதனை அடிப்படையாக கொண்டு பொலிஸார் தாக்குதலாளிகளை இனம் கண்டு அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண பொலிஸார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் ஓட்டுமடம் மற்றும் தாவடி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.










