நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்;
[2024-09-20 09:11:29] Views:[10]
படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு நேற்று (19) தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
இதுவரை காலம் மாகாண சபையின் பொறுப்பிலிருந்த இப் படகு 52 மில்லியன் ரூபா செலவில் திருத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பணிகளைத் தொடர்ந்து வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகை நேற்று (19) காலை உத்தியோகப்பூர்வமாக கையளித்தார்.
நெடுந்தீவு இறங்குத்துறைக்குச் சென்ற ஆளுநர், படகை பார்வையிட்டதுடன், நெடுந்தாரகை பயணிகள் படகின் திருத்தப் பணிகளுக்காக துரித நடவடிக்கையை மேற்கொண்ட ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி செயலகத்துக்கும், துறைசார் அமைச்சுக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
இதன்போது, நீண்டகாலமாக காணப்பட்ட போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தமை தொடர்பாக, ஆளுநருக்கு நெடுந்தீவு மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தினமும் ஒரு தடவை நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவான் இறங்குத்துறைக்கு இப்படகு பயணிக்கவுள்ளது. ஒரு தடவையில் சுமார் 80 பேர் பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.










