மணல் மற்றும் மரக் கடத்தலில் ஈடுபட்ட 25 டிப்பர்கள் ஒரேநாளில் கைப்பற்றப்பட்டன..!
[2024-08-30 11:01:18] Views:[13]
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் மற்றும் மரங்களை கடத்தி சென்ற 25 டிப்பர் வாகனங்கள் ஒரே நாளில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை மற்றும் யாழ்ப்பாணம் – மன்னார் நெடுஞ்சாலை ஊடாக சட்டவிரோதமான முறையில் மணல் மற்றும் மரங்கள் டிப்பர் வாகனங்களில் தொடர்ச்சியாக கடத்தி செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து நேற்றைய தினம் (29) கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
அதன் போது, உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி மணல் கடத்தி வந்த 24 டிப்பர் வாகனங்களும், மரங்களை கடத்தி வந்த ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களை பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைத்துள்ளதுடன், அதன் சாரதிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.










