தனியாக இரண்டு வங்கிகளில் பல கோடி பெறுமதியான பணம் மற்றும் தங்கநகைகளை கொள்ளையடித்தவர் கைது..!
[2024-05-29 12:49:00] Views:[10]
ஜா எல மற்றும் வென்னப்பு பிரதேசத்தில் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கிகள் இரண்டை உடைத்து பல கோடி பெறுமதியான பணம் மற்றும் தங்கநகைகளை கொள்ளையடித்த ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வெசாக் பண்டிகையை முன்னிட்ட வங்கி விடுமுறையின் போது ஜா எல பிரதேசத்தில் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கியின் சுவரை உடைத்து வங்கிக்குள் சென்று சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் மற்றும் பத்து லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணம் என்பவற்றை திருடியதுடன், வங்கியின் சிசிடிவி கமரா அமைப்பையும் முற்றிலுமாக கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரர் 48 மணிநேரத்திற்குள் கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல இரவு நேர விடுதி ஒன்றிற்கு அருகில் வைத்து 11,200 மில்லி கிராம் போதைப்பொருளுடன் சந்தேக நபரை கைது செய்தனர்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, வென்னப்பு பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றினுள் புகுந்து 06 கோடி பெறுமதியான தங்கம் மற்றும் நாடு முழுவதும் பல தபால் நிலையங்களின் பெட்டகங்களையும் திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் வங்கியில் திருடப்பட்ட சுமார் 500 வாடிக்கையாளர்களின் தங்க நகைகள், பெட்டகங்கள், சுத்தியல், அன்றைய தினம் அணிந்திருந்த ஆடைகள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், திருட்டுக்கு பயன்படுத்திய சொகுசு கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கசினோ விளையாட்டிற்கு அடிமையானவர் எனவும், அதற்காக பணம் சம்பாதிப்பதற்காக இந்த திருட்டுக்களைச் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.










