7 வயது மகனை தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை செய்த தாய் கைது..!
[2024-05-29 12:06:22] Views:[10]
மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் தனது 7 வயது மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தாக்கியதுடன், அதனை காணொளியாக வெளிய்ட்டதாக கூறப்படும் தாய் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் தனது 7 வயதுடைய மகனை தொங்கவிட்டு சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதுடன், அது குறித்த காணொளியையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, 35 வயதுடைய சந்தேகநபரான பெண் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனை சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சந்தேகநபரை இன்று (29) ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். .
அதேவேளை குறித்த காணொளியில் மற்றுமொறு பெண், இரண்டரை வயது சிறுவன் ஒருவரை சித்திரவதைக்கு உள்ளாக்கும் காட்சியும் பதிவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பிலும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.










