தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஜூன் 9 இல் யாழில் பகிரங்கக் கருத்துப் பரிமாற்றம் :
[2024-05-28 13:14:13] Views:[10]
ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொது வெளியில் பகிரங்கமாக ஆரோக்கியமான முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெறவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
இவ்வாறு நேற்று (27) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் :
தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது சம்பந்தமாக முனைப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சிவில் சமூகத்தினர், பத்தி எழுத்தாளர்கள் என்னைச் சந்திக்க வேண்டுமெனக் கேட்டிருந்தார்கள். அதற்கினங்க சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அவர்களோடு நிறைவான கருத்துமிக்க கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
அதன்போது தமிழ்ப் பொது வேட்பாளர் யோசனைக்கு மாறாக நான் தெரிவித்த கருத்துக்களுக்கான காரணங்களை எடுத்துச் சொல்லியிருந்தேன். இந்தச் சூழ்நிலையிலேயே இப்படியானதொரு முன்னெடுப்பு செய்வதற்கான தங்களுடைய காரணங்களையும் அவர்கள் எங்களுக்கு எடுத்துச் சொல்லியிருந்தார்கள்.
குறித்த கூட்டத்தின் இறுதியில் இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் பொது வெளியில் பகிரங்கமாக ஆரோக்கியமான முறையிலே கருத்துப் பரிமாற்றம் செய்வது நல்லது என்கின்ற என்னுடைய யோசனையை நான் சொன்னபோது அவர்களும் அதனை முழு மனதோடு ஏற்றுக்கொண்டார்கள்.
அதற்கினங்க இரு தரப்பு நியாயங்களையும் ஆரோக்கியமான முறையில் கலந்துரையாடும் வகையில் எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் யாழ்ப்பாணத்தில் பாரியளவிலான கூட்டமொன்றை நான் ஒழுங்கு செய்திருக்கின்றேன்.
அந்தக் கட்டத்தில் தங்களுடைய கருத்துக்களை முன்வைக்குமாறு இரு தரப்பிலிருந்தும் சிலருக்கு அழைப்பு விடுத்திருக்கின்றேன்.
அப்படியான உரையாடல் நடைபெறுவது நல்லது. ஏனென்றால் பொது மக்களுக்கும் இதனுடைய சாதக பாதகங்களை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். இதைக் குறித்து மக்களுடைய மனதிலே எப்படியான சிந்தனைகள் இருக்கின்றதென்பதையும் நாங்களும் ஒரு அளவுகோலிட்டு அறியக் கூடியதாக இருக்கும்.
ஆகவே, ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசாமல் அனைவரும் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்ற சூழலைப் பேணுமாறு மிகவும் அன்போடு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாரான விடயங்களில் நாங்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் மக்கள் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதில் மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும். ஆகவே, இந்த விடயத்தை நாங்கள் ஒரு முன்னுதாரணமாக வைத்து ஐனநாயக வழியிலே எப்படியான கருத்துப் பரிமாற்றங்களை வெளிப்படைத் தன்மையோடு பேச முடியும் என்பதையும் இதன் மூலம் நாங்கள் வெளிப்படுத்த முடியும். ஆகையினாலே அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என அவர் குறிப்பிட்டார்.










