இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஒருவர் கொழும்பில் கைது!
[2024-05-24 12:48:25] Views:[10]
இந்தியாவின் அகமதாபாத்தில் கடந்த (19) திகதி கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சந்தேக நபர்களுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை இலங்கை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களுடனும் இந்நாடினுள் தொடர்பு வைத்திருந்த நபர்கள் தொடர்பில் தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சந்தேக நபர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சந்தேக நபர்களுக்கு விமான டிகெட் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்துள்ளதாகவும், அவரை தொடர்ந்து பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் மற்றும் குறித்த அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்கள் தொடர்பில் விரிவாக விசாரிப்பதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் அண்மையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்தக் குழு இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.










