வடக்கு மாகாண ஆளுநரால் யாழ் கோப்பாய் பகுதியில் அம்மாச்சி பாரம்பரிய உணவகம் திறந்து வைப்பு
[2024-05-17 10:21:34] Views:[12]
யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கோப்பாய் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் P.S.M சார்ள்ஸ் அவர்கள் நேற்று திறந்து வைத்தார்.
இதன் போது வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவும் வகையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 1060000/= ரூபா பெறுமதியான 12 தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது ஆளுநர் உரையாற்றுகையில் “கிராமிய அபிவிருத்திக்கு உள்ளூராட்சி நிறுவனங்கள் ஆளுமை பெற்றவையாக காணப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அற்ற நிலையிலும், அரச அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் தற்போது செயற்படும் உள்ளூராட்சி நிறுவனங்கள் தங்களின் ஆளுமைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். தற்போது முன்னெடுக்கப்படும் இவ்வாறன செயற்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கின்றது. மேலும் பெண்களை வலுப்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் மேலும் பெண்கள் பொருளாதாரத்தில் சுதந்திரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். தங்களை, தாங்களே வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனூடாக பெண்கள் தங்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தாங்களே தீர்வை பெற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.” என வடக்கு மாகாண ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.










