முறிகண்டியில் கோர விபத்து! இராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பலி!!
[2024-04-26 11:46:19] Views:[9]
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து காலை 6.00 மணியளவில் முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் விபத்து இடம் பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கப் வாகனம் முன் நோக்கிச் செல்ல முற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த கப் வாகனம் திடிரென இயங்காமல் நின்றுள்ளது. எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர் மோதாமல் தடுக்கும் நோக்குடன் சாரதி பாரஊர்தியை செலுத்த முற்பட்டுள்ளார்.
இதன்போது, கப் வாகனத்தில் பாரஊர்தி மோதியதில் அதில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் வீதியில் விழுந்துள்ளனர், அதில் ஒருவர் மேல் பாரஊர்தி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் கிளிச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










