யாழில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கூட்டுப்பாலியல் பலாத்காரம்!
[2024-04-24 07:30:18] Views:[13]
யாழ்ப்பாணத்தில் கும்பல் ஒன்று பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவர் தாய் தந்தை மரணமடைந்ததையடுத்து மூத்த சகோதரியுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம், பெண்ணின் மூத்த சகோதரி உயிரிழந்த நிலையில், மருதங்கேணி பகுதியில் உள்ள ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து கடந்த ஐனவரி மாதம் இவரது சகோதரன் இவரை தனது இல்லத்திற்கு அழைத்து சென்று இருந்த நிலையில், சகோதரனின் ஏற்பாட்டில் கட்டாயப்படுத்தி போதைப் பொருளை வழங்கி, அதனை பலவந்தமாக நுகர வைத்து, அடித்து துன்புறுத்தி பலருடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் குறித்த பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது சகோதரனால் மீன்டும் மருதங்கேணி ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் (22) பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் குறித்த பெண் தகவல் வழங்கியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு தடவைகள் 10 பேரை உள்ளடக்கிய கும்பல் போதைப் பொருளை கட்டாயப்படுத்தி நுகர வைத்து, உயிர் அச்சுறுத்தல் விடுத்து தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தனர் என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
பெண்ணின் வாக்குமூலத்தை முறைப்பாடாக பதிவு செய்துள்ள பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது










