உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 வருடங்கள் நிறைவு! தேவாலயங்களில் விசேட ஆராதனைகள்:
[2024-04-21 10:15:19] Views:[9]
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறான 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி 273 பேரின் உயிரைப் பறித்தனர்.
இதில் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், சிலர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை.
ஐந்தாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரையான ஊர்வலம் இன்று நள்ளிரவு ஆரம்பமாகவுள்ளது.
குறித்த ஊர்வலமானது, கொச்சிக்கடை தேவாவலயத்தில் இருந்து மட்டக்குளி பாலம், வத்தளைச் சந்தி ஹெகித்த வீதியூடாகவும், அங்கிருந்து நீர்கொழும்பு, கொழும்பு பிரதான வீதியூடாக கட்டுவாப்பிட்டி தேவாலயம் நோக்கி பயணிக்கவுள்ளது.
மேலும், கொழும்பு மறை மாவட்டத்திலுள்ள சகல தேவாலயங்களிலும் நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் இன்றையதினம் நினைவுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் இன்று நடைபெற்றன.
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் நடைபெற்ற நினைவேந்தலின் போது ஏப்ரல் 21 அன்று தேவராதனையின் போது தமது தியாகங்களை இன் உயிராக்கியவர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செய்யப்பட்டது.
தேவாலய பிரதான மணியும் ஒலிக்கப்பட்டு கூட்டுத்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதனை யாழ்ப்பாண மறைமாவட்ட பங்கு குரு முதல்வர் ஜெயரட்ணம் அடிகளார் ஒப்புக் கொடுத்தார்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கிறிஸ்தவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










