தெற்காசியாவிலே அதிக அளவு நீரிழிவு நோயாளிகள் காணப்படும் நாடு இலங்கை..!
[2024-03-15 14:56:14] Views:[9]
தெற்கு ஆசியாவிலே அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் உள்ள நாடாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளது. அளவுக்கதிகமான சீனி பாவனை மற்றும் பால் மா பாவனையே இதற்கான அடிப்படை காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். சீனி இறக்குமதிக்காக 300 மில்லியன் டொலரும்,பால் மா இறக்குமதிக்காக 350-400 மில்லியன் டொலரும் ஒதுக்கப்படுகிறது. எனவே இவற்றின் பாவனையைக் குறைப்பதன் மூலம் பொருளாதாரத்துக்கு மாத்திரமின்றி சுகாதாரத்துறைக்கும் பாரிய அளவிலான ஒத்துழைப்பினை வழங்க முடியும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டினார்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் நாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இவை தொடர்பில் மக்களுக்கு தொடர்ந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் அவசியமாகும்.நாட்டில் சீனியின் பாவனை அதிகமாகக் காணப்படுகின்றமையே நீரிழிவு நோய்க்கான பிரதானமான காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.அதிகளவான சீனி பாவனை உடல் நலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, மறுபுறம் தேசிய பொருளாதாரத்திலும் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. காரணம் சீனி இறக்குமதிக்கு 300 மில்லியன் டொலர் ஒதுக்கப்படுகிறது, இதனைக் குறைத்துக் கொண்டால் எமது பொருளாதாரத்தைக் கூட வலுப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும்.
அத்தோடு பால் மாவையும் நாம் அதிகமாகப் பயன்படுத்துகின்றோம். உலகில் அதிகளவு பால் மாவினைப் பயன்படுத்தும் நாடாக இலங்கை காணப்படுகிறது. எம்மைப் போன்று பால் மாவினால் தயாரிக்கப்படும் பாலை அருந்துபவர்கள் உலகில் வேறு எவரும் இருக்கமாட்டார்கள். இந்தளவுக்கு பால் மாவை உபயோகிக்க வேண்டுமா என்பதை வைத்தியர்கள் தம்மிடம் வரும் நோயாளர்களிடம் கேட்க வேண்டும். இவ்வாறு பால் மா பாவனையைக் குறைத்தால் அது சுகாதாரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் நன்மையாகும். வேறு நாடுகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் 350 - 400 மில்லியன் டொலரை நாம் பால்மா இறக்குமதிகாக செலவிடுகின்றோம். இந்த தகவல்களை வைத்தியர்களும், ஊடகங்களும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.










