யாழில் மீனவர்களிடையே முறுகல்: பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு!
[2024-03-04 12:46:15] Views:[12]
நேற்று (03) ஞாயிற்றுக் கிழமை வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. பொலிஸாருடனும் முறன்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தால் தடை விதிக்கப்பட்டது.
உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு வெற்றிலைக்கேணி மீனவர்களின் கையொப்பத்துடன் வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தினரால் கரைவலை தொழில் சம்மாட்டியிடம் கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
எனினும் தமது அறிவுறுத்தலை கண்டுகொள்ளாது தொடர்ச்சியாக உழவு இயந்திரம் மூலம் கரைவலை தொழில் செய்துவருவதால் நேற்று காலை கரைவலை வாடி, மீனவர்களால் முற்றுகையிடப்பட்டு உழவு இயந்திரம் மூலம் கரைவலை இழுப்பது நிறுத்தப்பட்டது.
உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை உடனடியாக நிறுத்தாவிடில் எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடப்போவதாக அப்பகுதி மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு அதிகளவான மீனவர்கள் ஒன்று கூடியமையால் சிறிது நேரம் பதட்டம் நிலவியதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசாருடனும் மீனவர்கள் முறுகலில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.










