வடக்கில் பெருமளவு காணிகளை விடுவிக்கும் இராணுவம்!
[2024-03-04 12:06:22] Views:[10]
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இராணுவம் வசமுள்ள 164 ஏக்கர் நிலங்களை எதிர்வரும் 10ஆம் திகதி விடுவிக்க இராணுவம் இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடந்த 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெற்ற காணி தொடர்பான நடமாடும் சேவைக்கு, காணி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், மாவட்டச் செயலர், இராணுவ உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலிலேயே 164 ஏக்கர் நிலங்களை விடுவிக்க இராணுவ உயரதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலாலி கிழக்குப் பிரதேசத்தில் இராணுவம் வசமுள்ள 59 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன. அதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர்ப் பகுதியில் இராணுவம் வசமுள்ள 105 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன.
இந்த நிலங்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.










